Sunday, 14 June 2026

பால்வண்ணம் பிள்ளை - புதுமைப்பித்தன்


 

பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வாழ்க்கையே தஸ்தாவேஜிக் கட்டுகளாகவும், அதன் இயக்கமே அதட்டலும், பயமுமாகவும், அதன் முற்றுப்புள்ளியே தற்பொழுது 35 ரூபாயாகவும் – அவருக்கு இருந்து வந்தது. அவருக்குப் பயமும், அதனால் ஏற்படும் பணிவும் வாழ்க்கையின் சாரம். அதட்டல் அதன் விதிவிலக்கு.

பிராணிநூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள்தான். சித்த உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங் குணங்களாகக் கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள்.

பால்வண்ணம் பிள்ளை ஆபீஸில் பசு. வீட்டிலோ ஹிட்லர். அன்று கோபம். ஆபீஸிலிருந்து வரும் பொழுது – ஹிட்லரின் மீசை அவருக்கு இல்லாவிட்டாலும் – உதடுகள் துடித்தன. முக்கியமாக மேலுதடு துடித்தது. காரணம், ஆபீஸில் பக்கத்துக் குமாஸ்தாவுடன் ஒரு சிறு பூசல். இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற தென்றார். இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார். பால்வண்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாக வீட்டிற்கு வந்தார்.

பால்வண்ணம் பிள்ளைக்கும் அவருடைய மனைவியாருக்கும் கர்ப்பத் தடையில் நம்பிக்கை கிடையாது. அதன் விளைவு வருஷம் தவறாது ஒரு குழந்தை. தற்பொழுது பால்வண்ண சந்ததி நான்காவது எண்ணிக்கை; பிறகு வருகிற சித்திரையில் நம்பிக்கை.

இப்படிப்பட்ட குடும்பத்தில் பால்வண்ணக் ‘கொடுக்கு’கள் ‘பேபி ஷோ’க்களில் பரிசு பெறும் என்று எதிர்பார்க்க முடியாது. பால்வண்ணம் பிள்ளையின் சகதர்மிணி, உழைப்பிலும் பிரசவத்திலும் சோர்ந்தவள். தேகத்தின் சோர்வினாலும், உள்ளத்தின் களைப்பினாலும் ஏற்பட்ட பொறுமை.

கைக்குழந்தைக்கு முந்தியது சவலை. கைக் குழந்தை பலவீனம். தாயின் களைத்த தேகம் குழந்தையைப் போஷிக்கச் சக்தியற்று விட்டது. இப்படியும் அப்படியுமாக, தர்ம ஆஸ்பத்திரியின் மருந்துத் தண்ணீரும், வாடிக்கைப் பால்காரனின் கடன் பாலுமாக, குழந்தைகளைப் போஷித்து வருகிறது. அந்த மாதம் பால் ‘பட்ஜட்’ – எப்பொழுதும் போல் – நான்கு ரூபாய் மேலாகி விட்டது.

இம்மாதிரியான நிலைமையில் பால் பிரச்னையைப் பற்றி பால்வண்ணம் பிள்ளையின் சகதர்மிணிக்கு ஒரு யுக்தி தோன்றியது. அது ஒன்றும் அதிசயமான யுக்தியல்ல. குழந்தைகளுக்கு உபயோகமாகும்படி ஒரு மாடு வாங்கி விட்டால் என்ன என்பதுதான்.

தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியும், ‘சும்மா’ இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள். பால்வண்ணம் பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது.

பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில் உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார்.

வீட்டிற்குள் ஏறியதும், “ஏளா! அரங்குச் சாவி எங்கே?” என்று கேட்டுக்கொண்டே மாடிக்குச் சென்று ஷெல்பை ஆராய்ந்தார்.

அவர் மனைவி சாவியை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள். அவளுக்குப் பால் நெருக்கடியை ஒழிக்கும் மாட்டுப் பிரச்னையை அவரிடம் கூற வேண்டும் என்று உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. ஆனால் மெக்ஸிகோ பிரச்னையில் ஈடுபட்டிருக்கும் பால்வண்ணம் பிள்ளையின் மனம் அதை வரவேற்கும் நிலையில் இல்லை.

“என்ன தேடுதிய?” என்றாள்.

“ஒரு பொஸ்தகம். சாவி எங்கே?”

“இந்தாருங்க. ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லுணுமே! இந்தப் புள்ளைகளுக்குப் பால் செலவு சாஸ்தியா இருக்கே! ஒரு மாட்டெத்தான் பத்து நூறு குடுத்து புடிச்சிப்புட்டா என்ன?” என்றாள்.

“இங்கே வர வேண்டியதுதான், ஒரே ராமாயணம். மாடு கீடு வாங்க முடியாது. எம் புள்ளெய நீத்தண்ணியை குடிச்சு வளரும்!” என்று சொல்லி விட்டார். மெக்ஸிகோ வட அமெரிக்காவிலிருந்தால் பிறகு ஏன் அவருக்குக் கோபம் வராது?

பால் பிரச்னை அத்துடன் தீர்ந்து போகவில்லை. அவர் மனைவியின் கையில் இரண்டு கெட்டிக் காப்பு இருந்தது. அவளுக்குக் குழந்தையின் மீதிருந்த பாசத்தினால், அந்தக் காப்புகள் மயிலைப் பசுவும் கன்றுக் குட்டியுமாக மாறின.

இரண்டு நாள் கழித்துப் பால்வண்ணம் பிள்ளை ஆபீஸிலிருந்து வந்து புறவாசலில் கை கழுவச் சென்ற பொழுது, உரலடியில் கட்டியிருந்த கன்று, வைக்கோல் அசை போட்டுக் கொண்டிருக்கும் மாட்டைப் பார்த்து ‘அம்மா’ வென்று கத்தியது.

“ஏளா?” என்று கூப்பிட்டார்.

மனைவி சிரித்துக் கொண்டே – உள்ளுக்குள் பயம் தான் – வந்தாள்.

“மாடு எப்பொழுது வந்தது? யார் வாங்கிக் கொடுத்தா?” என்றார்.

“மேலவீட்டு அண்ணாச்சி வாங்கித் தந்தாஹ. பாலு ஒரு படி கறக்குமாம்!” என்றாள்.

“உம்” என்றார்.

அன்று புதுப்பால், வீட்டுப் பால் காப்பி கொண்டு வந்து வைத்துக் கொண்டு கணவரைத் தேடினாள். அவர் இல்லை.

அதிலிருந்து பிள்ளையவர்கள் காப்பியும் மோரும் சாப்பிடுவதில்லை.

அவர் மனைவிக்கு மிகுந்த வருத்தம். ஒரு பக்கம் குழந்தைகள். மற்றொரு பக்கம் புருஷன் என்ற குழந்தை. வம்சவிருத்தி என்ற இயற்கை விதி அவளை வென்றது.

இப்படிப் பதினைந்து நாட்கள்.

மாட்டை என்ன செய்வது?

அன்று இரவு எட்டு மணி இருக்கும். பால்வண்ணம் பிள்ளையும் சுப்புக் கோனாரும் வீட்டினுள் நுழைந்தார்கள்.

“மாட்டைப் பாரும். இருபத்தஞ்சி ரூபா!” என்றார்.

“சாமி! மாடு அறுபது ரூபாய் பெறுமே!” என்றார் சுப்புக் கோனார். “இருபத்தைந்து தான். உனக்காக முப்பது ரூபாய் என்ன? இப்பொழுதே பிடித்துக் கொண்டு போக வேண்டும்!”

“சாமி! ராத்திரியிலா? நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன்!” என்றார் சுப்புக்கோனார்.

“உம் இப்பவே?”

மாட்டையவிழ்த்தாய் விட்டது.

மனைவி ‘மாடு எழுபது ரூபாயாயிற்றே, குழந்தைகளுக்குப் பாலாயிற்றே’ என்று தடுத்தாள். மேலும் வரும்படி வேறு வருகிறதாம்.

“என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக் கிடும்” என்றார் பிள்ளை.

சுப்புக் கோனார் மாட்டை அவிழ்த்துக் கொண்டு போகும் பொழுது, மூத்த பையன், “அம்மா! என் கன்னுக் குட்டி!” என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு அழுதான்.

“சும்மா கெட, சவமே!” என்றார் பால்வண்ணம் பிள்ளை.

Tags- 


பால் வண்ணம் பிள்ளை

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

விபரீத ஆசை புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தனின் சிறுகதை உத்திகள்

புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆய்வு

புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்

புதுமைப்பித்தனின் படைப்புகள்

புதுமைப்பித்தன் சிறுகதைகள் list


No comments:

Post a Comment

#tamilstories #tamil #tamilstorytelling #tamilsurvivalstories #tamilstory #tamilnovel #tamilshortstories #ponniyinselvan #ponniyinselvanlovers #vanthiyadevan #ponniyinselvanmemes #adityakarikalan #kannadasan #balakumaran #sirukathai #tamilstoryteller #tamilbooks #namuthukumar #story #tamilbooklovers #tamilovebgm #tamilpoetry #tamilstories #maan #tamilquotes #tamilmotivation #wattpadstories #gurmeetchoudhary #tamilkavithai #hotnessoverload #geet #romanticcouple #tamilpoetry #kavithai #maaneet #kavithaigal #tamilpoem #maansinghkhurana #tamilromance #hottestcouple #officeromance #tamilwriters #gurti #bedtimestories #kadhaigal #tamilquotes #love #bookstamil #ps #lovestatustamil #lovestory #tamilmemes #writeraswin #tamillove #samantha #tamilbookmemes #skids #goundamani #moralstories #tamilmotivation #tamilstatus #wattpadstories #tamilromance #geethanda #tamilstories #romance #story #chennai #lovestory #stories #srilanka #tamil #wattpad #tamilstatus #storytime #tamilsongs #tamillove #tamillyrics #bestcouple #maan #tamilquotes #tamilmotivation #wattpadstories #gurmeetchoudhary #tamilkavithai #maaneetians #ghsp #ponniyinselvanbook #tamilkavithai #tamilwriters #tamilcartoon #tamilstorybooks #storiesforkids #wattpad #tamilliterature #geetmaansinghkhurana #tamilbookstagram #tamilwriter #tenali #aswintamilstories #shortstory #sivagamiyinsabadham tamil short stories tamil stories tamil kathai tamil short story tamil kadhaigal tamil blog stories motivational tamil stories inspirational tamil stories moral stories in tamil life stories in tamil. love stories in tamil friendship stories in tamil family stories in tamil village stories in tamil best tamil short stories real life tamil stories.emotional tamil stories,heart touching tamil stories meaningful tamil stories small stories in tamil tamil blog tamil literature tamil writing tamil content tamil readers tamil storytelling. தமிழ் சிறுகதை,தமிழ் கதைகள்,சிறுகதைகள் ,வாழ்க்கை கதைகள் உந்துதல் கதைகள்.